Saturday, May 5, 2012

நான் ஒரு துரியோதனனோ ?
கண்ணில் படுபவை
நெஞ்சைச் சுடுபவை அனைத்தும்
காலை முதல் இருட்டிலும் கூட
ஏன் அக்கிரமங்களாய்
வடிகட்டின அயோக்கியத்தனங்களாய் ?
குப்பைத் தொட்டிவரை தூக்கிவரும் குப்பையை
நெருங்கியதும் வெளியில் விசிறிவிடும் பாதகர்கள் -
தன் வீட்டு வாயிலில் வாகனம் நிறுத்தாது
அண்டை அயலார் வீட்டை அடைத்து
அனைத்தையும் நிறுத்தி ,'இது உன் ரோடா? '
எனச் சண்டையிடும் மனம் புதைத்தோர் -
பொது நடைபாதையை வக்கணையாய் வளைத்துக்
கண்டதைப் பரப்பிக் கடைபோடும் கல்நெஞ்சர் -
' மச்சி பஜ்ஜி ' என்று கொச்சை மொழியில்
தகாதன கத்தி பெண்மையை இழிவு செய்து
' கொத்து பரோட்டா ' வேலையைத்
தம் எதிர்காலத் தொழிலாக்கி
பேருந்தை ரணகளமாக்கும் கல்லூரி மூடர்கள் --
நடைபாதை, பாலங்கள் பதித்திட்ட பலகைக் கற்களை
இரவோடு இரவாகத் திருடிப்
பாதையைப் பொந்தாக்கும் பஞ்சமா பாதகர்கள்--
வரிசையிலே முதியோரும் கைக்குழந்தைப் பெண்டிரும்
கால் கடுக்க நிற்கையிலே
அரிதாரம் பூசிய பகட்டு ஆடை வாலிபர்கள்
வரிசை சிதைத்து வஞ்சகம் செய்து
காரியம் முடிக்கும் அந்தக் கண்ணில்லாக் கபோதிகள்--
காசு பெறாத காரியத்திற்கு ஏழையை ஏமாற்றி
அரசு அலுவலக வாசலிலே ஆயிரங்கள் பறிக்கும்
அற்பப் பதர்களாம் அரசியல் ஆணவத்தார் ---
' ஓசி 'யாய்த் தினம் தினம் தின்று கொழுக்கும்
அந்த 'ஹோட்டல் ' முன்னே பாதை மறித்து நிற்கும்
பூதக் கார்களைக் காணாது குருடாகி
எளிய மனிதர்களின் இரு சக்கர வண்டிகளை
அடிமாடுபோல் வண்டியில் ஏற்றி நாசமாக்கி
அலையவிடும் காவல்துறை லஞ்ச அலுவலர்கள்--
பொய் ஒன்றைத் தவிர வேறு ஒன்றையும் பேசாத
தொலைக்காட்சி விளம்பரங்கள் தரும் தயாரிப்பாளர்கள் --
சொல்லக் கணக்கில் அடங்காது அய்யகோ , என் செய்வேன் !
கருணை உள்ளம் காண்கிலேனே -
' கருணை இல்லம் ' எனப் பெயர் தாங்கும் பல இல்லங்களும்
கருணையற்ற செயல்கள் பல புரிகையிலே என் செய்வேன் ?
கடவுளே , எனை நீ தருமனாக மாற்ற முடியுமோ சொல் ?
நல்லதையே இன்றை உலகில் எங்கு நான் காண்பேன் ?
----சந்திர கலாதர்

No comments:

Post a Comment