Thursday, May 31, 2012

மணல் குவியலும் சிறு குழந்தைகளும் உலகமெங்கும் பிரிக்க முடியாதவை ;
மணற்குவியல் ," வா..வா ! " என்று ஒலியில்லா மொழியில் மிகப் பாசமாய்க் குழந்தைகளை அழைக்கிறது.
ஆயிரம் விலை உயர்ந்த விளையாட்டுப் பொம்மைகளையும் மணலையும் குழந்தை முன் வை ;
அது மணலை நோக்கியே பாய்ந்தோடி வந்து தொப்பென அதன் மீது வீழ்ந்து மகிழும் . மணலில் சிறுகை செருகி ,இறைத்து ,தூற்றி ,அளைந்து,குவித்து ,தோண்டி ,மறைத்து ,உருண்டு ,பிறண்டு,சிந்தி, சிதறி ,கொட்டி, வாரி --
தனக்குத் தானே பேசி ,தன் விளையாட்டைத் தானே உருவாக்கி ,பசி மறந்து ,தாயும் மறந்து ,அதிலேயே தூங்கியும் போகும் எனின் ,இந்த மணலின் மகிமையை என்னென்பது !
மணலில் எழுதாத விரல்கள் உலகில் உண்டோ ?
மணலில் பதியாப் பாதங்கள் உண்டோ ?
மணலில் குதியாத நெஞ்சமும் உண்டோ ?
மணலில் குழந்தை ஆகாப் பெரியோரும் உண்டோ ?
மணலில் மஞ்சம் காணா மனமும் உண்டோ ?
மணல் ஒரு மந்திரம் ; புரியாத தந்திரம் !
மணல் மேட்டில் எது வீழ்ந்தாலும் அது குழந்தையாய்த்தான் எழும் !
-------சந்திர கலாதர்.

Tuesday, May 29, 2012

crowded by thousands of forms of gods ,
each hovering over my head in mad circles,
yes , i have lost my meditation and devotion;
my lips cry for a god
and my heart seeks another
and my intellect runs after another;
i am at a loss to determine which of this pantheon
may rush for my help in my hour of distress;
confusion stirs me to stupidity and turbidity-
i politely send them all away
and i think of the one god
who has no face ,no trunk
but only two feet for me to grab on
and hold them on to my chest ;
i am in terrible fears to lift my head up
lest i may see a body or a face ;
for i know with only his feet in vision
i reach my nameless and formless god
in seconds of my submerging into meditation !
------s.chandra kalaadhar
மதுரையில் என் இரு அண்ணன்களின் வீடு ;
பெரியவர் கீழே ; இளையவர் மேலே.
விருந்தினனாய் என்றோ வந்து போகும் தம்பியாய் நான் -
வீட்டின் வெளிப்புறமும் உட்புறமும் நன்கு ' விறு விறு 'துடைத்து மெருகேற்றியதுபோல் ஒரு பளபளப்பு .
மார்கண்டேயன்போல் நிரந்தரமான ஒரு தூய்மை -
ஏன் ,இந்த வீட்டிற்குள் மட்டும் தூசி படை எடுப்பதில்லை ?
என்றும் நீங்காத வியப்பு எனக்கு .
ஒருங்கிணைந்த உடற்பயிற்சி [ mass drill ] வகுப்பில் திறந்த வெளியில் பள்ளி மாணவர்கள் ஒழுங்காக நிற்பார்களே ,அதுபோல் ,சுற்றுக் கம்பிப் பின்னலுக்குள் செடிகளும் ,மரங்களும் அழகாக ,தூய்மையாக நிற்பதைப் பார்த்து ரசிக்கிறேன் .
வீட்டின் வெளியில் அழகிய கோலம் 77 வயதிலும் தளராத அக்கா விசாலத்தின் கைங்கரியம் -
அக்கா , தலை வணங்குகிறேன் .
செடி கொடி,மரங்களின் பசிக்கு ,அவை உடல் சோர்ந்து கேட்காமலேயே ,விடிகையிலேயே தேவை அறிந்து பாதங்களை நனைக்கும் நீர் .
இவை எல்லாமே ஆறு மணிக்குள் முடிந்து விடுகின்றன .
இவற்றுக்கெல்லாம் சாட்சியம்போல் கோயில் மணி ஓசையைவிடப் பலமாக அதிர்வுகள் எழுப்பும் குயிலின் அங்கீகாரமும் ஏற்பும் .
தலை மேலிருந்து வில்வ மரத்தின் அடர்வின் புதையலுள் ..சனியனே ,எங்கிருந்து காதைக் கிழிக்கிறாய் ? கழுத்தை ஒடிக்கிறாய் ? கண்ணை வலிக்கிறாய் ?கத்தித் தொலைகிறாய் ?
பின் வீட்டினுள் அண்ணனின் குழாய் அடிப்புகள் , " டங்கு டங்கு " என்று சீராக ...குடி நீருக்காக -
பின் நெடிய துடைப்பானை ,மெழுகானை எடுத்துக் கொண்டு வீட்டின் மூலை முடுக்குகள் எல்லாவற்றையும் ஈர மெழுகல் .
கீழ் வீட்டிற்குள் பார்வை படர்ந்தால்...அலமாரிகளில் ,சமையல் அறையில் நாளிதழ் விரிப்பின் மீது அழகாக நின்று கொண்டிருக்கும் ' பள பள ' பாத்திரங்கள் .
நாளிதழ் விரிப்புகளும் அழுக்கின்றி எண்ணெய்ப் பசையின்றி வெகு தூய்மையாய் ...
எப்படி ..எப்படி முடிகிறது ? எப்படிக் கூடும் ?
வீடே தூய்மை பேசுவதானால் ...நம்ப முடிகிறதா ?
இதுதான் ஈடுபாடு [ devotion ]!
நம் கால் அழுக்கு தரையைக் கறை கொள்ளச் செய்துவிடுமோ என நுனிவிரல் தாங்கி நடனமிடச் செய்கிறது நம்மை .
என் அண்ணனுக்கோ வயது 75.
முதுகுத் தண்டு வயிற்றினை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டுவிட்ட தோற்றம் .
உணவின் வரவு செலவுக் கணக்கில் செலவே மிகை ஆயின் இப்படி ஆகுமோ ?
உழைப்பு , உழைப்பு , உழைப்பு !
தலை வணங்குகிறேன் அண்ணன் சுப்பிரமணி அவர்களே !
மேல் வீடு செல்கிறேன் -
சிறிய அண்ணன் சங்கரநாராயணன் இல்லம் -
சற்று அடைசலாக உள்ளது ..சற்று என்ன , மிகவே !
எங்கு பார்த்தாலும் ,சுவரிலும் , அலமாரிகளிலும் ,பீரோக்கள் ,குளிர்ப் பெட்டி மீதும் ,எங்கெல்லாம் ஒட்டிக்கொள்ள முடியுமோ அங்கெல்லாம் அடைசலாய் சிறிதும் பெரிதுமாய் அலங்காரப்பொருட்கள் !
அடைசலாய் இருந்தும் அதுவே தெரியாது அழகாய் ..கண் உறுத்தாமல் ,தூய்மையாய் ,கலா வண்ணமாய் !
ஒரு சிற்பி உன்னுள் இயங்கிக் கொண்டு இருக்கிறான் அண்ணனே !
ஒரு கணினியின் ' சுண்டெலி'யைக் கூட அவன் விரல்கள் ஆமை ஆக்கிவிடுகின்றனவே !
மக்காச்சோள இதழ்களைக்கூட சுந்தர மயமாக்கி விடுகின்றனவே !
அசந்து போகிறேன் !
தேவையற்ற கண்ணாடித் தகடுகள் வண்ண ' ஓவியம் தாங்கிகள்' ஆகிவிடுகின்றனவே !
எத்தனை எத்தனை கடவுள் படங்கள் பொம்மைகள் நீக்கமற நிறைந்து ...ஒவ்வொன்றைப் பார்பதற்கே ஒரு நாள் ஆகும் போலிருக்கிறதே !
இங்கேயும் தூசியின் ஆதிக்கம் இல்லை !
ஒரு படைப்பாளியின் விஷமத்தனங்கள் ,சேட்டைகள் எங்கணும் !
வீட்டு முன் முற்றத்தில் குடிகொண்டிருக்கும் சிறு பிள்ளையாருக்கு காலையில் வழிபாடு இவர் தம் கடமை ...முடிந்தபின் வீட்டினுள் நிறைந்திருக்கும் அத்தனை தெய்வங்களுக்கும் அலங்காரம்,ஆராதனை எல்லாம் ...எப்படி தினமும் முடிகிறது ?
ஒரு நாள் விளக்கு ஏற்றினால் ஒரு மாதம் என் வீட்டுப் பிறைத் தெய்வங்களை நான் இருட் சிறை தள்ளி விடுகிறேனே!
பின் சமையலில் கைதேர்ந்ததால் மிகப் பக்குவமாய் அண்ணியாருக்கு மறு கையாய் !
எல்லாவற்றையும் மீறி அன்பே வடிவாய் , பாச மூர்த்திகளாய் இருவரும் என் குழந்தைகளுக்கு
கேட்டுக் கேட்டு ,என் அன்னையை நினைவூட்டுவதாய்ப் பரிமாறியது.
சிறிய அண்ணனே ,தலை வணங்குகிறேன் !
நல்ல பயணம் - என் குழந்தைகள் ஏதாவது பாடம் கற்றுக் கொண்டிருந்தால் தம் இல்லத்தை இனியாவது தூய்மையாக வைத்துக் கொள்ளுவார்களா ?
----சந்திர கலாதர்

Thursday, May 24, 2012

அம்மா !
வலிகளில் என் உடலைப் பிழிந்து
வலிகளில் உன்னையும் கதற அடித்து
அழுகைகளின் உச்சத்தில் இவ்வுலகில் நுழைகையில்
உன்னைத் தவிர நான் எவரையும் அறியேன் ;
எனக்கு நீ மட்டுமே என்பதாய்
தொப்புள் கொடி தொட்டுச் சொன்னது--
உயிரின் எல்லைக்கே கொண்டு சென்றவனை
நீயோ விழிநீருடன் ஆசையாய்ப் பார்த்தனை ;
சோர்வுற்றபோதிலும் ஓர் நிம்மதிப் பெருமூச்சிடை
ஒரு புறமாய் உன் கையிடுக்குள் படுக்கவைத்துப்
பெருமையாய் வெம்மையாய் அணைத்தனை;
நெடும் கனவுத் தூரிகையின் நனவினை
அயர்வு நதிகளில் மூழ்கிக் கண்டனை ;
எதுவும் அறியாத ,பார்க்கத் தெரியாத எனக்கு
அமுதக் குடத்தின் வாயில் காட்டி உயிர் ஊட்டினை-
பசியையும் கூட நீ தானே முதலில் கற்பித்தனை;
தூங்கக் கூட நீ தானே பழக்கி வைத்தனை -
என் அழுகையின் நிறங்களுக்கெல்லாம்
பொருந்தும் பொருள்கள் கண்டு கையிலும் தோளிலும்
மார்பிலும் நெடும் புடவைத் தூளியிலுமாய்
ஏதேதோ துண்டுதுண்டுச் சொற்கள் கோர்த்து
ஏதேதோ ராக இழைகளில் நளினமாய்ப் பின்னி
உடலை சிறுசிறு நடன அசைவுகளில் திருகி
எத்தனை எத்தனை சமாதானங்கள் சொல்லி
மெதுமெதுவாய் என் இமைகளை உறக்கத்தால் நீவி
பார்வைத் தென்றலை என் மீது இசைத்து
கனவுகளிடை உலவ விட்டு உன் உறக்கம் இழந்தனை ;
உன் அணைப்புப் போலவே அத்தூளியும் இனித்தது ;
இரு கைப்பிடிக்குள் அதை அருமையாய் அசைத்து
இரு எல்லைகள் தொட்டு மீளும் ஊஞ்சல் என்றாக்கி
மெல்லிய இருட்டினை அதனுள் செலுத்தி
தலைக்கு அணை என பூந்துகில் சேர்த்து
கொசுக் கடிக்காது எனைப் பொன்னாய்ப் போர்த்தி
இயற்கை நனைப்பில் 'சர்ர் ' என உருட்டி
வேலைக்கிடையிலும் நெடுங்கயிற்றால் ஆட்டி
சிறு ஓய்வுகளில் முகம் நுழைத்து ஆசையாய்ப் பார்த்து -
அந்தத் தூளிகள் இன்று எங்கே போயின ?
அந்தப் பாச நெருக்கம் இன்றையத் தொட்டில்கள் தருமோ ?
கன்னம் குழிபட சிறு மலர் விரிவாய்
என் தூக்கங்களிடை அன்று சிரித்ததெல்லாம்
உன் அளவிடற்கரிய பாசம் வியந்தே !
உன்னில் வளர்ந்தேன் உன்னால் வளர்ந்தேன்
தூக்கமும் ஆக்கமும் அளிக்கும் தாயை நீங்கி
குழந்தை நெஞ்சில் பிறர்க்கு இடமுண்டோ , மனமே ?
---சந்திர கலாதர்

Tuesday, May 22, 2012

குயிலே , நீ வெகு நாணம் உள்ள பறவையோ ?
இலைச் செறிவுகளில் உச்சாணிக் கொப்புகளில்
விழிகள் நோகவைத்துச் செருகி ஒளிகிறாய் -
ஆனால் பத்துத் திக்குகளும் திணறடிக்கும்
உன் ஓயாத ஒழியாத கூவல்களும் கொஞ்சல்களும்
காற்றைக் கதறடிக்கும் கத்தல்களும்
நாணத்தைப் பந்தாடி நலிந்திடச் செய்வதும் ஏன் ?-
உன் சிறு தொண்டையுள் வலிய புல்லாங்குழல்
வக்கணையாய்ச் செருகியது யார் சொல்வாய் ?
என் செவியின் ' ராடார் ' பதிவுகள் மீறி
எங்கிருந்து கூவுகிறாய் ? திகைப்பில் தவிக்கின்றேன் -
பம்பரமாய்த் தலை பத்து திக்கு சுழன்றிடினும்
பார்வை சிக்காது பதுங்குகின்றாய் பாவி !
தரை தட்ட மாட்டாயோ , வான சஞ்சாரியே ?
வசந்தம் முழுவதுமே தேடிக் களைத்து விட்டேன்;
கண்டபாடில்லை ;உன் எக்காளமும் நின்றபாடில்லை !
------சந்திர கலாதர்
கோடையின் சீற்றத்தில் என் கவிதை ஆறு வற்றியதோ ?
ஊற்றின் உள் உயிரை உறிஞ்சிக் குடித்ததுவோ ?
மணல் விரிவாய் என் வெறுமை அம்மணமாய்க் கிடக்கிறதோ ?
ஏன்? ஏன் ? ஏன் ? என்று எத்தனை கேட்டிருப்பேன் ?
நண்பர் சிலர் , எழுது தளங்கள் என்னைக் கேட்கின்றன-
காலை மாலை எனக் காற்றில் வட்டமிடும் கற்பனைகாள் !
எனை நீத்து எங்கு சென்றீர்? வறுமையில் வாடவிட்டீர் ?
உடலின் சுணக்கங்கள் உள்ளத்தை உதைப்பதுவோ ?
எண்ண நதிகளே எங்கிருந்தாலும் எனைச் சேர்வீர் !
-----சந்திர கலாதர்

Monday, May 7, 2012

ஒரு தம்பியின் காணிக்கையாய் 
&
இன்று எங்கள் ' கிச்சா ' அண்ணனின்
முப்பத்து நான்காம் நினைவு நாள் -
' கிருஷ்ணமூர்த்தி ' பெயருக்கு ஏற்றாற்போல்
நிறமும் அழகும் இளமையும் -
எல்லாம் இருந்தென்ன ? ஆயுள் இல்லாது போனதே -
எங்கள் வீட்டின் மற்றோர் தியாகச் செம்மல் ;
துன்ப வாடை எங்களை வருத்தாது
போர்த்தி வளர்த்த அருமை அண்ணன் --
'பிரம்மச்சாரி '--முடிவு முன்பே தெரிந்ததாலோ ?
புத்தகமும் நிகண்டும் விரித்தபடி
எப்போதும் துணையாய் !
குப்புறப் படுத்தபடி தலையணையில் இரு முட்டி குத்தி
ஆழ்ந்து புத்தகம் தாங்கள் உழுகையிலே
இலக்கியங்கள் உள்ளே பயிர் செய்கையிலே
என்னுள் ஒரு சிறு பொறாமை பொரிந்ததுண்டு-
' உங்களைப்போல் ,உங்களை விஞ்சி நான் விரிய வேண்டும் '-
சில பொறாமைகள் தீயவை அல்லவே !
இத்தகு பொறாமைகள் என்னை முடுக்கி விட்டன ;
தங்கள் பொடி எழுத்துக் கிறுக்கல் கடிதங்கள்
தந்தையின் பெருமிதப் புன்னகை பெறுகையில்
என்னுள் முயற்சிப் பிரளயங்கள் வெடித்தன -
பார்த்ததை எல்லாம் ஊன்றிப் படித்தேன் ;
நிகண்டின் பொடிகளை அள்ளிப் பூசிக் கொண்டேன் ;
அப்பாவிடம் புன்னகை மட்டுமே பெறமுடியும் ;
ஆனால் தாங்களோ ,' இவன் கடிதங்களை
என்னால் நிகண்டின் துணையின்றிப் படிக்க முடியவில்லை '
எனத்  தந்தையாரே   விழி உயர்த்திப் பெருமை விரிக்கையில்
என் உள்ள உறுதி பேரலையாய் ஆர்ப்பரித்தது --
எழுதினேன் இலக்கணங்களுள் சிக்கித் தவித்தபடி ;
மெல்ல மெல்ல என்னைச் செதுக்கிக் கொண்டேன் ;
என்னுள் என்னைக் கண்டுகொண்டதுபோல்
எனக்கே தோன்றிய பின் எனை ஆட்டிப் படைத்த
இயற்கையை என் கவிதை நெறியாக்கினேன் -
தந்தையிடம் காண்பிக்க தயங்கி நின்றேன் ;
எனக்குத் தோன்றியதோ தங்கள் உருவமே ;
அஞ்சலில் நெய்வேலிக்கு அனுப்பி வைத்தேன் ;
அமுத மழை தெரியுமா ? எவர் பார்த்தார் ?
நான் கண்டேன் அண்ணனே உங்கள் அன்பு மொழிகளில் !
சிறு பாராட்டுத் தூறலுக்காக ஏங்கிய சிறு பயிராய்
அன்று நான் தவிக்கையில் வேரில் ஊற்றாகினீர் !
இரவெல்லாம் பனி நனைந்து பால்நிலா தின்று
விண்மீன்கள்  பறித்து காதலில் இயற்கை தோய்த்து
அன்று நான் ஆசையாய் எழுதிய கவிதைகள் அவை -
தங்கள் நெடிய கடிதம் கை சேர , விரித்தேன்
காதல் கொண்டு படித்தேன் தவித்தேன்
மறுபடி மறுபடி தேனை விடாது நக்குவதுபோல்
ஒளிந்திருந்து ஓராயிரம் முறை படித்தேன் ,
உண்டேன் உயிர்த்தேன் பறந்தேன் துள்ளி வீழ்ந்தேன் --
ஒரு வாக்கு அதனில் என்னை உச்சி மலைகளில்
உன்மத்தமாய் உலாவ வைத்தன ,இளைஞன்தானே!
'உன் கவிதைகளில் ' வோர்ட்ச்வோர்த் 'தின் சாயல் காண்கிறேன் ! '
வேறென்ன வேண்டும் ஒரு சிறு கவிஞனுக்கு?
' i wandered lonely as a cloud ' என்று எனை மயக்கிய
அந்த இயற்கைக் கவிஞன் அருகில் நிற்பதாய் ஓர் உணர்வு -
இன்று என் கவிதைகளை சில அமெரிக்கர்கள்
ஆங்கிலேயரும் கூட அன்பாய் ஓரிரு வரிகளில் ,
' wonderful ' , ' perfect ' என்று பாராட்டுகையில்
எனது உரமாய் என்னுள் ஊற்றாய் உயிராய் இலங்கும்
தங்களை நன்றியோடு நினைவு  கூர்கிறேன்--
அன்று 07.05.1978 இல் நீங்கள் மறைந்தது அறியாது
09.05.1978 இல் எனது வசந்தனின் முதல் ஆண்டு நிறைவில்
நான் மகிழ்ந்திருந்த கொடுமையை என்னென்பேன் ?
அன்று நான் எல்லோர்க்கும் என் செய்கையால் கசந்திருந்தேன்;
அன்னியப்பட்டதால் அண்ணனைப் பார்க்காத பாவியானேன் ;
அழகிய அண்ணா ,மரணம் சிதைத்த உன் திருமுகம்
இவன்  பார்க்கவேண்டாம் என்று எமனிடம் கூறிச் சென்றனையோ ?
தாங்களும் என்னைக் கொடியோன் என்று எண்ணி விட்டீரோ ?
இவன் ஒரு பாசப் பறவை என்று
என் சிறகுக் காற்று சொல்லவில்லையோ ?
உங்கள் அழகு முகம் என் நெஞ்சில் மிதக்கிறது ;
வற்றாத அன்பு என்னை என்றும் நனைக்கிறது ;
கண்களில் நீர்த்துளி முகிழ்க்கிறது ;
என் காணிக்கையாய் தங்கள் கால்களில் வீழ்கிறது .

-------சந்திர கலாதர்


   
         
          
    

--
S.CHANDRA KALAADHAR

Saturday, May 5, 2012

நான் ஒரு துரியோதனனோ ?
கண்ணில் படுபவை
நெஞ்சைச் சுடுபவை அனைத்தும்
காலை முதல் இருட்டிலும் கூட
ஏன் அக்கிரமங்களாய்
வடிகட்டின அயோக்கியத்தனங்களாய் ?
குப்பைத் தொட்டிவரை தூக்கிவரும் குப்பையை
நெருங்கியதும் வெளியில் விசிறிவிடும் பாதகர்கள் -
தன் வீட்டு வாயிலில் வாகனம் நிறுத்தாது
அண்டை அயலார் வீட்டை அடைத்து
அனைத்தையும் நிறுத்தி ,'இது உன் ரோடா? '
எனச் சண்டையிடும் மனம் புதைத்தோர் -
பொது நடைபாதையை வக்கணையாய் வளைத்துக்
கண்டதைப் பரப்பிக் கடைபோடும் கல்நெஞ்சர் -
' மச்சி பஜ்ஜி ' என்று கொச்சை மொழியில்
தகாதன கத்தி பெண்மையை இழிவு செய்து
' கொத்து பரோட்டா ' வேலையைத்
தம் எதிர்காலத் தொழிலாக்கி
பேருந்தை ரணகளமாக்கும் கல்லூரி மூடர்கள் --
நடைபாதை, பாலங்கள் பதித்திட்ட பலகைக் கற்களை
இரவோடு இரவாகத் திருடிப்
பாதையைப் பொந்தாக்கும் பஞ்சமா பாதகர்கள்--
வரிசையிலே முதியோரும் கைக்குழந்தைப் பெண்டிரும்
கால் கடுக்க நிற்கையிலே
அரிதாரம் பூசிய பகட்டு ஆடை வாலிபர்கள்
வரிசை சிதைத்து வஞ்சகம் செய்து
காரியம் முடிக்கும் அந்தக் கண்ணில்லாக் கபோதிகள்--
காசு பெறாத காரியத்திற்கு ஏழையை ஏமாற்றி
அரசு அலுவலக வாசலிலே ஆயிரங்கள் பறிக்கும்
அற்பப் பதர்களாம் அரசியல் ஆணவத்தார் ---
' ஓசி 'யாய்த் தினம் தினம் தின்று கொழுக்கும்
அந்த 'ஹோட்டல் ' முன்னே பாதை மறித்து நிற்கும்
பூதக் கார்களைக் காணாது குருடாகி
எளிய மனிதர்களின் இரு சக்கர வண்டிகளை
அடிமாடுபோல் வண்டியில் ஏற்றி நாசமாக்கி
அலையவிடும் காவல்துறை லஞ்ச அலுவலர்கள்--
பொய் ஒன்றைத் தவிர வேறு ஒன்றையும் பேசாத
தொலைக்காட்சி விளம்பரங்கள் தரும் தயாரிப்பாளர்கள் --
சொல்லக் கணக்கில் அடங்காது அய்யகோ , என் செய்வேன் !
கருணை உள்ளம் காண்கிலேனே -
' கருணை இல்லம் ' எனப் பெயர் தாங்கும் பல இல்லங்களும்
கருணையற்ற செயல்கள் பல புரிகையிலே என் செய்வேன் ?
கடவுளே , எனை நீ தருமனாக மாற்ற முடியுமோ சொல் ?
நல்லதையே இன்றை உலகில் எங்கு நான் காண்பேன் ?
----சந்திர கலாதர்