Wednesday, June 20, 2012

வானம் தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறதோ ?-
கார்காலம் அப்படி நினைக்க வைக்கிறது.
காக்கைக் கூட்டங்கள் குழுக்குழுக்களாய்த் திரிவதுபோல்
அதன் கழுத்து நிற மேகத் தொகுதிகள் வானம் நிறைத்து இருக்கின்றன -
பூமிக் குழந்தையை வானம் கருமேகப் பூச்சாண்டி இறக்கி பயமுடுத்துகிறதோ ?
மேக விளிம்புகளில் மழைச் சொரிவுகளின் நெடிய அசையும் திரைகள் அற்புதமாய் !
வானில் காற்றைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் பட்டங்கள் .
தென் வடலாய் மேலைத் திசையில் மேக சஞ்சாரங்கள்-
மழை இறக்க மனமில்லாத மேகப் பொதிகள் இடுக்குகளில் இழிய விட்டுவிட்டு யாருக்கோ எங்கோ
நீர்க்கலயம் ஏந்திச் செல்கின்றன.
குயில் ஒன்று மேகங்களைப் பரிதாபமாய் , ' டு...வீ , டு...வீ ' என்று ஏங்கி அழைக்கிறது .
அவற்றின் காதில் விழுந்ததோ இல்லையோ ,தெரியவில்லை .
----சந்திர கலாதர்
[ 20.06.2012/ மாலை 5 மணி ]

Tuesday, June 19, 2012

அம்மா !
நம் திறமை ஏதோ ஓர் துறையில் பாராட்டுப் பெறுகையில் ,மனம் துள்ளிக் குதிக்கிறது ;
இது இயல்புதானே அம்மா !
அந்தப் பாராட்டை அப்படியே மனம் கனக்கச் சுமந்துகொண்டு , நம் உளம் நெருங்கிய ஒருவர் முன்னே ,மிகுந்த ஆசையுடன் கவிழ்த்து ,அவரது விழி விரிதல்களை ,முக விசாலங்களை ,நெஞ்சு ஊறிவரும் பெருமைச் சொற்களைக் கேட்டு வானில் பறக்க இதயம் ' பறபற' க்கும்.
என் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ,அதுவும் என்னாலேயே மாற்றம் செய்யப்பட்டவை , சிலவற்றை அயல்நாட்டு கவிஞர்கள் சிலர் மனமாரப் பாராட்டி ,அது பலர் பார்க்க வெளிவருகையில் ,எனக்கு அதைத் தூக்கிக் கொண்டு ,அம்மா ,உன் திசையை நோக்கித்தான் ஓடிவரத் தோன்றுகிறது .
எவர் மொழிகளிலும் நான் எதிர்பார்க்கும் உணர்வுகள் ,அதன் விளைச்சல்கள் இல்லாது போகின்றன ;
என் மனம் தவிப்பில் சோர்கிறது ;
அம்மா ,மற்ற எவரிடமும் ,அது என் உடன்பிறப்புகள் ஆயினும்கூட ,என்னால் என் உணர்வுகளை
உள்ளது உள்ளபடியே கொட்டித் தீர்க்க முடியாமல் குன்றி நிற்கிறேன் ;
என் சிறகுகள் வெட்டப் பட்டது போன்ற வலியில் துடித்துப் போகிறேன் ;
ஆமாம் ,என்னால் எவர் முன்பும் இயற்கையாய் நான் எண்ணும் உயரத்துக்குப் பறக்க முடியவில்லை , தாயே !
அவர்கள் முன்பு நான் செயற்கையாகிறேன் ;
' தற்பெருமைக்குள் தலைகுப்பற வீழ்கிறானே! என்ன பிதற்றல்? ' -என்று நினைத்து விடுவார்களோ என்று என்னை விலங்கிட்டுக் கொண்டு விடுகிறேன் தாயே !
ஒவ்வொரு வரியாக ,ஒவ்வொரு சொல்லாக என் கவிதைகளின் ஆழ அகலங்களை நான் விளக்க எண்ணுகையில் ,பிரதிபலிப்புகள் மங்கிய நிலையில் நான் தோற்று நிற்கிறேன் ,அம்மா !
அம்மா ,உன்னிடம் தான் என் இதயம் எல்லாத் திரைகளையும் விலக்க முடிகிறது ;
என் முகமே பல வாய்களாக பரிணமிக்கின்றது ; அணுஅணுவாக ஒவ்வொரு உணர்ச்சியையும்
மலர்த்துகிறது ;
அம்மா, நீ பேசுவதில்லை ;மௌனமாகிறாய் ;
உன் கண்கள் என்னை விழுங்குகின்றன ;என் சொற்களைத் தாகத்துடன் அருந்துகின்றன.
குறுக்கீடுகள் எதுவும் இல்லை ; ஆர்வக் குறைவுகள் எங்கும் இல்லை ;
என் வாய்க்கலயம் அனைத்தையும் கொட்டித் தீர்த்த பின் ,பெருமிதமாய் ஒரே ஒரு புன்னகை உன் இதழ்களில் தவழ விடுவாயே , அது ," நீ ஜெயச்சுட்டடா கண்ணா ! " என்று சொல்லாமல் சொல்லும் ;
அதற்காக நான் என்றும் ஏங்குகிறேன் .
உன்னைத்தேடி மொட்டை மாடியில் திறந்த வெளியில் வான் நோக்கிக் கூவி நிற்கிறேன் ;
அம்மா ,விண்ணுலகில் நீ எங்கிருந்தாலும் அங்கே என் உணர்ச்சி ஊற்றுகள் பாய்ந்து உன் பாதங்கள் நனைக்கும் ;
எங்கிருந்தாலும் நீ மனம் எல்லாம் மொழியாக வாய் மட்டும் மௌனமாய் வாழ்த்துவாய் ;நெஞ்சம் பெருமையால் விம்முவாய் ;
அது போதும் அம்மா எனக்கு !
---சந்திர கலாதர்
கொன்றை மர வகைகள் தமக்குத் தாமே பூ அபிஷேகம் செய்து கொண்டிருக்கின்றன ;
அல்லது ஆகாயத்தின் பாதம் பணிந்து நின்று ,உச்சந்தலைகளில் மலர் தூவிய ஆசிகள் பெற்றனவா !
இலைகளைத் திருப்பித் திருப்பிப் பூங்காற்று அப்படியென்ன அதிசயம் காண்கிறது ?
காற்று பூக்களைத் தாலாட்டுகிறது ;
காற்றை நான் பார்க்கிறேன் ;
காற்றை நான் கேட்கிறேன் ;
காற்றின் மொழியினை நான் படிக்கிறேன் ;
காற்றை நான் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறேன் !
இந்த உலகின் உல்லாசம் எனக்கு வேறெங்கு கிடைக்கும் இப்பிரபஞ்சத்தில் ?
நான் ஜூன் மாதத்தில் வசந்தத்தின் வண்ண மலர்ச் சொரிவுகளை , கொத்து மலர்க் கோலங்களை
இன்னும் ஓராண்டிற்கு இழந்து கொண்டிருக்கிறேனா ?
நான் புதியதாய்க் கார் மேகங்களுக்காகக் காத்திருக்கிறேனா ?
நீர்ப் பாதைகள் மேலேறி மின்னல்களைப் பிடிக்க மயங்குகிறேனா ?
மின்னல் கயிறுகள் கொண்டு மேகக் கூரை அமைக்க எண்ணுகிறேனா ?
வானம் , வியர்க்க விறுவிறுக்கும் சூரியனுக்கு ஒரு வழியாய் விடை கொடுத்திருக்கிறதோ ?
சூரிய தாகம் ஒருவாறாகத் தணிந்து விட்டதோ ?
நண்பகலிலும் ஓர் மங்கிய மயங்கும் ஒளி காற்றோடு குதூகலமாய் உறவாடுகிறது !
கடைசியில் ஒளிந்துவிட்ட சூரியனை ....சூரியனா அது ?...சூரியனின் சந்திரனை அல்லது சந்திரனின் சூரியனை ..மேகத் திரை வழி பார்க்கிறேன் , துன்புறுத்தாத ,அரைத்தூக்க விழிகளுடன் !
காற்றுத்தான் மற்ற நான்கு சக்தி வடிவங்களுக்குமே உயிரூட்டம் கொடுக்கிறது.
காற்றில்லாமல் ஒளி , ஒலி,மண் ,விண் எதற்குமே அழகில்லை ;சக்தியும் இல்லை .
காற்றுத்தான் இப்புவியின் விழாக்களின் நாயகன் ;
சந்தோஷங்களின் உயிர் ஊற்று ;
சிரிப்புகளின் சிறப்பு !
மரங்கள் ,மலர்கள் ,இலைகள் ,அலைகள் ,ஜ்வாலைகள் ,விண்மீன்கள் எல்லாமே மகிழ்ச்சிக் கூத்தாடுவது காற்றின் கைகுலுக்களில்தான்..தோழமையில்தான்!
காற்றே ...என்னை நீ அயர்விலிருந்து , தளர்விலிருந்து, மரணத்திலிருந்தும் காப்பாற்றுகிறாய் !
என்னைக் கொஞ்சுகிறாய்..தழுவுகிறாய் ,கட்டி அணைக்கிறாய் ..தள்ளியும் விளையாடுகிறாய் !
புற்தரைகளில் மாயம் காட்டுகிறாய் ;
அலைகளைப் பூரிக்க வைக்கிறாய் ;
செவிகளில் பறவைகளின் இனிய அழைப்புகளைச் சேர்க்கிறாய்-
ஆஹா ! ஒரு மழை துவங்குகிறது மாயச் சூழலிடை--
இதை எப்படி மழை என்பது ?
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ...பல நொடி இடைவெளிகள் விட்டு விட்டு ..மேக மெல்லிய கசிவாய்..என்னை நனைக்காது ..ஈரமும் ஆக்காது ..மெல்லிய தொடர் தூறலும் ஆகாது ..அப்படி என்ன மழை இது /
இது மழையே அல்ல ..பின் எது சொல்லத் தெரியவில்லையே !
இவை மாயத் துளிகள் ..என்னை மயக்கும் மலர்களோ ?
என் மேனியை அத்துளிகள் தீண்டுகையில் என்னில் எத்துணை சிலிர்ப்பு !
உதடுகள் உள்ளச் சொற்களைப் பிதற்றுகின்றன;
ஆனந்தம் என்னை உருட்டுகிறது;
இது மேனி அனுபவங்கள் ..சொல்லில் சிறக்காது .
---சந்திர கலாதர்
[ 18.06..2012 / திங்கள் கிழமை / ஆனி 4 / நந்தன ஆண்டு /மாலை மணி 4 ]

Monday, June 18, 2012

o what a climate today !
o where is the sun that squeezed dry my blood into sweat so long ?
the day unusually rolls up and sets aside the sparkling quilt of the sun;
and the ashen clouds have spread their thin mats all over the skies
and the cheerful winds on joyful feet spread happiness everywhere
on top of all , as a crowning glory , there is a dreamy rain -
no , i cannot call this rain , or a misty fall ,nor a soft drizzle-
it is of dreamy drops ,here and there , distanced by long seconds ,
and tossed far and wide by the sprinting and sporting wind,
sending shivers of thrill into the streams of blood
and giving birth to spontaneous expressions of ecstasy;
it is a rainless rain , raining joy and dance -
the light is cool and gentle and not hurting;
it is the winds that create the festival of joy
and spray laughter that bubbles up amidst the flowery trees-
o what is the language of the flowers and leaves ?
are they one and the same or different ?
o how i wish to speak their noiseless language !
today i could venture out into the open even at 4 p.m.
with no risk of burning my soles and skin ;
today my dance is not on flames but on flowers-
the sky has bid adieu to the sweating sun of june ;
at last i find the sun of the moon or the moon of the sun
high above on the western skies ,harmless and half-sleepy ;
the nature today has painted everything in mild colours,
drawing hearts out into the open to the bliss of the seasons !
where else in the universe except on this lovely earth
could i get this solemn bliss from the elements of nature ?
i will be born again and again on this beautiful earth .
------s.chandra kalaadhar [18.06.2012/ monday /aani 4/nandhana /4 p.m.

Saturday, June 16, 2012

மகனே ! என் இளைய மகனே ,சூரியா !
வா , என் அருகில் வந்து அமர் ;
எனக்குள் அழுத்தமான சில லக்ஷியங்கள்!
அவற்றை நீ அலட்சியம் செய்ய மாட்டாய் ;
என் ஜீவ அணுக்களால் அமைந்தவன் நீ -
எப்படி நீ மாற்று சிந்தனை கொள்ளுதல் கூடும் ?
பெண்ணைப் பெற்றோரிடம் இவ்வளவு பொன் போடுங்கள் ;
உங்கள் பெண்ணுக்காக எவ்வளவு கூடுமோ
அவ்வளவு போட்டாலும் சம்மதம் எனக் கூறிப் பின்
' இவ்வளவு தானா? 'எனும் ஏமாற்றம் அதில் ஒளித்து
அதனால் பெண் வாழ்வை முகம் இடித்து
நாராசங்களால் செவி கிழித்து சிதைக்கலாகாது ;
பெண் அன்றிப் பொன் வேண்டேன் என்று உறுதியாய் நில் .
பொன் வேண்டின் என் திறத்தால் நான் பெறுவேன் எனச் சொல் .
அப்படிச் சொனனால் பையனுக்கு என்னவோ ஏதோ என்று
திரைமறைவில் முகவாய் இடிப்போர்க்கு
நீ சிறந்த ஆண்தான் என்று காலம் பதில் சொல்லும்;
பொன் கேட்டு அலைந்தால்தான் நீ ஒரு பெண்டுகன் -
எதுவுமே வேண்டாம் என்று அலங்காரம் அடுக்கிவிட்டு
பின் 'அப்படியே சொன்னாலும் நீங்கள் சீதனம் அடுக்க வேண்டாமா ?'
என்று கதைப்போர் பலர் உண்டு உலகிலே ;
அந்த அக்கப்போர் எதுவும் இன்றி ஒரு சீர் பொருளும்
உறுதியாய் நீயே ஏற்காதே; ஊர்ப்பெண்டிர் மெச்சுதற்கு
நீ பகடைக் காய் ஆகாதே ;தர்மத்தின் பழிச்சொல் ஏற்காதே -
உன் பட்டம் படிப்பு,தொழில் இன்ன பிற கிள்ளையாய்க் கூறி
' படிக்காதவனுக்கே அங்கே அறுபது பவுன் போட்டான் '
என்று சூசகமாய்ப் பேசி உள்ளக் கிடக்கையை தம்பட்டம் போடாதே.
படிக்காதவனுக்குத்தானே , ஆம். பொன் துணை வேண்டும்
படித்தவனுக்கு எதற்கப்பா பொன் கவச மறைப்புக்கள் ?
படிப்பைப் பொன்னால் எடை போடும் மூடமை ஏற்காதே ;
பிள்ளை பெற்று விட்டால் ஈசனுக்கு அடுத்து நானே என
நினைப்பவர் மத்தியிலே நம் குடும்பம் வேறுபட்டதப்பா-
பெண் பெற்றவன் நம் அடிமை எனும் ஆணவத்தின் அடிவயிற்றில்
நெருப்பு அள்ளிப் போடப் பிறந்தவர் நாம் என்று கொள்-
திருமண நாளில் ' பளீர் ' ஒளியிடை பரிசுக்காகவும் பல் இளிக்காதே!
பரிசுகள் கண்டிப்பாக ஏற்கமாட்டேன் என்று அழைப்பில் தெளிவாக்கு;
ஒரு கை குலுக்கி மறு கையுள் கையூட்டு பெறுவதற்கு ஈடு அது;
ஆசிகள் மனதார வாழ்த்துக்கள் மட்டுமே உனை என்றும் வாழ்விக்கும் -
உன் வீட்டின் ஒவ்வொரு பொருளும் உன் வியர்வையில்
உன் ஆண்மையில் நேர்மையில் நடந்து உள் புகவேண்டும் ;
மணமகளும் மணமகனும் எளிமை ஆடையில் எழில் சிறக்க வேண்டும்
பல்லாயிரம் கொட்டி பட்டாடைகள் பூணாதே ,பேசுவோர் பேசட்டும் ;
சம்பிரதாயம் என்று வாய்க்கு வாய் பேசி அச்சேற்றில் நாறாதே
சம்பிரதாயங்கள் என்றுமே தமக்கு சாதகமாக வளைக்கப் படுபவை
பெண் வீட்டாரைக் கொல்வதற்கே உருவான கொலைக் கருவிகள் ;
பெண் படித்திருந்தாலும் அவள் மொட்டை மரம்
ஆண் படித்துவிட்டால் ஆலமரம் எனக் குருடாய் நினைக்காதே ;
பெண்ணுக்கும் வாய்ப்புக் கொடு ;மேற்படிக்கச் செய் -
அந்தப் படிப்புக்கு பெண் வீட்டார் படி அளக்க எண்ணாதே !
பெண்ணை வேலைக்காரி என்று நாளெல்லாம்
உன் பின்னேயே துண்டு தூக்கி அலைய வைக்காதே
சமையலில் துவைத்தலில் அனைத்து வேலையிலும்
அன்போடு கைகொடு தாழ்வாகப் பார்க்காதே -
உன் தாயோ தந்தையோ இதை மீறி ஒருவேளை
ஊர் பேசும் நாய் குலைக்கும் என்று காரணம் கடைந்தெடுத்து
அதைக் கேள் இதைக் கேள் என்று உன் செவியில் வித்திட்டால்
மகனே அவர்களைத் தயங்காது தூக்கி எறி;
ஆண் போல வாழ்வாய் அறுதலியாய் என்றும் வாழாதே
உன் தந்தை அப்படித்தான் திருமணம் செய்து கொண்டான்
உன் தாத்தா பாட்டி பெருமை போற்று -
நீயும் என் வழி நடப்பின் என் ஆன்மா சாந்தி கொள்ளும் .
--------சந்திர கலாதர்

Monday, June 4, 2012

அவள் ஒரு தாய் . தன் மகள் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் என்று உணர்கிறாள். சுற்றிலும் ஜ்வாலைகளாய்க் கோபமும் ஆவேசமும் ; இவற்றையெல்லாம் தாண்டியவள் தாய். அவள் கண்களில் தெரிவது தன் மகளின் பதட்டமோ தவிப்போ அன்றி வேறொன்றும் இல்லை .பேச்சின் நுணுக்கங்கள் அவளுக்கு அக்கறை இல்லை .தன் அத்தனை நகைகளையும் அள்ளுகிறாள் ; இரு கைகளுள் ஏந்துகிறாள் ;கொந்தளிக்கும் கணவனிடம் நீட்டுகிறாள் --" எனக்குப்பின் இவையெல்லாம் அவளுக்குத்தானே ; இனி எனக்கு எதற்கு ? நான் இனி எங்கே பகட்டாக வெளியே செல்லப் போகிறேன் ..அவளிடம் கொடுத்து விடுங்கள். அவள் நம் குழந்தை ; வாழவேண்டியவள் " என்று சிறு தயக்கங்கள் எதுவுமின்றித் தருகிறாள் .
அந்தத் தியாகத்தை ,பாசத்தை என்னென்பேன்!
அந்த கரங்களின் பாச வெம்மையில் பொன் நகைகள் இளகி உருகி தங்க நதியாய்க் கண்ணீர் பெருக்கின .
அந்தத் தாயின் நோயுற்ற மெய் மறைந்து ,தங்க ஜ்வலிப்பாய் ஓர் பேரழகுடன் அவள் பிரகாசித்தாள்.
பணம் ,சொத்து இவை எல்லாமே பிணமாய்க் கீழே கவனிப்பாரற்றுக்  கிடந்தன.
------சந்திர கலாதர்