Sunday, November 4, 2012

தென் திசை பார்த்து நின்றாள்

வான் பார்த்த மாடம் மீது--

முகமோ கீழ்த்திசை திரும்பிற்று
...
அடர் கூந்தலோ தோள் வழி

மேற்கு சரிய இறங்கிற்று

வலக்கையில் ஒரு சீப்பு ஏந்தி

வழிசிகை இடக்கை உட்பிடித்து

பொன்னேர் ஒட்டுதல்போல்

தலை நிலத்தை

உழுகிறாள் உழுகிறாள்

உச்சி முதல் நுனி வரை

சலியாது சளைக்காது

ஒய்யார நிலைப்பாட்டில்

முதுகு இப்பக்கமாய்

ஓர் மணி நேரமாய் --

தலை மேடெல்லாம்

ஆழக் கோடுகள்

வாய்க்கால் போட்டிருக்குமோ ?

இன்னமும் திருப்தியில்லை

என்று முடிப்பாளோ ?

பொறுமையின் எல்லையில்

பொருந்தாத நான் !

ஒரு வழியாய் அப்பாடா ---

ஆனால் கூந்தல் கூட்டி

தன் பின்புறம் மிடுக்காய் வீசியவள்

அரைமணி நேரம்

அன்பாய்க் கோதி விட்டாள்

கூந்தல் சங்கு இறுக்கி

சிலமுறை அடித்துக் கொண்டாள் .

முகம் வானம் பார்க்க

கூந்தல் திரட்டிப் பரப்பிக்

காதுமடல் உள்ளனுப்பிப்

பின் நுனி கோதி----.

இருட்டி விட்டது

இவள் எப்போதுதான் அதற்கு

மூன்று கால் தருவாளோ ?

முடுக்கிச் சடை காண்பாளோ ?

---சந்திர கலாதர்

04.11.2012 /ஞாயிறு / ஐப்பசி 19

மாலை 6 மணி .

No comments:

Post a Comment