Wednesday, October 12, 2011

i and the nature

இயற்கையும் நானும்

&

குல்மோஹார் மலர்கள் ஓய்ந்து விட்டன ..

எண்ணி ஒன்றிரண்டே மலர்களும் மொட்டுகளும் ;

ஆனால் ஒளி தெறிக்கும் பசுமையில் மயிற்தோகைபோல் இளந்தளிர்கள் ..

கடைசி மலர்கள் ஏதாவது தனிமைச் சோகத்தில் தவிப்பனவோ ?

எதிர் வீட்டில் செண்டு செண்டாய் அடர்ந்த வேப்ப மகிழ்வுகள் !

ஒளியும் நிழலும் கைகோர்த்து உன்னத மாயைகள் ஜனிக்கும் பிரதேசங்கள் !

இதுவென்ன இளந்தளிர் மாதமோ ?

முருங்கை மரங்கள் வெண் நக்ஷத்திரங்களை அதன் பிரபஞ்ச வெளியில் கொட்டி வைத்துள்ளன .

காலைக் குளிர்வு ..வான் முகடுகளில் புரட்டாசி மழைக் கனவு மந்தைகள் .

உயரே வட்டமிடும் இலக்கற்ற ஹெலிகாப்ட்டர் தட்டாரப் பூச்சிகள் .

உயர உயரப் பறந்து இப்போது கிழிந்த கனவுகளாய் மரங்களில் சிக்கிய பட்டச் சிதைவுகள் கறைகள்போல்.

குயில்களின் தொண்டைகள் ஒட்டிக் கொண்டனவா ?

அவை கூவித் தேயத் தேவை வசந்த இளவரசனா ?

தடமே தெரியாது எங்கே இப்போது பதுங்கிக் கொண்டன ?

'விழுந்த இடத்தில் வாழ்ந்து விடு ' --என்ற சேதியை இந்த வேப்ப அரச மரக்கன்றுகள் கற்பிக்கின்றன .

என்ன நம்பிக்கை தைரியத்தில் அடுக்கு மாடிக் கட்டிடச் சுவர் இண்டு இடுக்குகளில் முளைத்து

நிற்கின்றன ?

செங்கல் சுவர்களில் என்ன வாழ்வாதாரம் ?

எனினும் சோகித்து ஸ்தம்பித்து நிற்கவில்லையே !

எவரும் பாராதவரை வாழ்ந்து விடுவோம் எனும் துணிச்சலா ?

----சந்திர கலாதர் ...13.10.2011...காலை 06.45 மணி



--

No comments:

Post a Comment